
அட்டைக் கத்தியாக இருந்தாலும் சுற்றுகிற வேகத்தில் சுணக்கம் காட்டக் கூடாது. அப்படி காட்டினால் என்னாகும் என்பதற்கு சமீபத்திய உதாரணம்தான் ரஜினி. குசேலன் வெளிவருவதற்கு முன்பு வரை அடுத்த சூப்பர் ஸ்டார் நாற்காலி யாருக்கு? என்று கருத்துக் கணிப்பு நடத்திய பத்திரிகைகள் கூட, 'அந்த நாற்காலியா? எங்காவது ஓரமா இருக்கும்' என்று ஒதுங்கிக் கொண்டன.
சட்டை பட்டனை போட்டால் கூட 'விஷ்ஷ்க்க் விஷ்ஷ்க்க்' என்று ரஜினி ஸ்டைலில் 'ஸ்பெஷல் எஃபெக்ட்' போட்டுக் கொண்ட ஹீரோக்கள், இப்போது ரஜினியை விட்டு விட்டு நேரடியாக எம்ஜிஆர் பக்கம் தாவியிருப்பதுதான் அதிர்ச்சியோ அதிர்ச்சி. சமீபத்தில் வெளிவந்த வில்லு படத்தில் 'அச்சம் என்பது மடமையடா' என்று பாடிக் கொண்டேதான் அறிமுகம் ஆகிறார் விஜய். அதுமட்டுமல்ல, படத்தில் இன்னொரு நாயகனாக எம்ஜிஆரும் நடித்திருக்கிறாரோ என்று ஐயப்படுகிற அளவுக்கு விஜயின் காதல் ஊற்றை திறந்தும் வைக்கிறார் புரட்சித்தலைவர். (ஒரு பக்கம் எம்ஜிஆரின் காதல் காட்சிகள் திரையில் ஓட, அதை பார்த்துக் கொண்டே நயன்தாராவை காதலிக்கிறார் விஜய்)
இளைய தளபதி விஜயின் ஸ்டைலிலேயே ஆக்ஷன் வேடத்தில் உதைத்து தள்ளும் சின்னத்தளபதி பரத், எம்ஜிஆர் நடித்து வெளிவந்து சக்கை போடு போட்ட 'எங்க வீட்டு பிள்ளை' படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். நாகிரெட்டியாரின் விஜயா புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் எம்ஜிஆர் ஃபார்முலாவைதான் பின்பற்றுகிறாராம் பரத்.
பிரபல வார இதழான ஆனந்த விகடன் குரூப் தயாரிக்கும் 'சிவா மனசுல சக்தி' படத்தில், 'எம்ஜிஆரும் இல்லே, நம்பியாரும் இல்லே...' என்ற பாடலில் புரட்சித்தலைவரின் படக்காட்சிகளை ஏராளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்படி அடுத்தகட்ட ஹீரோக்களும் ரஜினியை தவிர்த்துவிட்டு, இன்னமும் கட்டுக் கோப்பாக இருக்கும் எம்ஜிஆர் ரசிகர்களை கவர ஆரம்பித்துவிட்டார்கள்.
தான் நடித்த அநேக படங்களில் எம்ஜிஆரின் புகழ் பாடுபவராகவே வருகிற சத்யராஜ், சமீபத்தில் 'இதயக்கனி' பத்திரிகையின் சார்பாக நடத்தப்பட்ட எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். "இன்று எம்ஜிஆரின் பெயரை சொல்லி நிறைய பேர் கட்சி துவங்குகிறார்கள். அவரது பெயரை உச்சரிக்காவிட்டால் ஓட்டு கிடைக்காது. தலைவரின் பெயரை உச்சரிப்பவர்கள், அவரது நல்ல பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிற காரியங்களை செய்யாதீர்கள்" என்று கூறியிருக்கிறார். சினிமாக்காரர்களுக்கும் சேர்த்துதான் சத்யராஜ் இப்படி அட்வைஸ் செய்திருப்பதாக நம்புகிறார்கள் கோடம்பாக்கத்தில். இத்தனை காலமாக தங்கள் படங்களில் ரஜினியை புகழ்ந்த இந்த ஹீரோக்களுக்கு திடீரென்று எம்ஜிஆர் பாசம் எங்கிருந்து வந்தது என்பதுதான் கோடம்பாக்க நிகழ்வுகளை உற்று கவனிப்பவர்களின் கேள்வியாக இருக்கிறது.
அதிலும் சினிமா ஹீரோக்கள் இரண்டு பேர் 'எம்ஜிஆர் எனக்குதான்' என்று முண்டா தட்டி வருவதுதான் பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. தான் நடித்த 'சிலம்பாட்டம்' பட ப்ரிவியூவிற்கு விஜயையும் அழைத்து மகிழ்ந்த அதே சிம்புதான் இப்போது விஜயோடு மல்லு கட்டுகிறார். கோடம்பாக்கத்தையே அதிர வைத்திருக்கும் இந்த விஷயம் பற்றி ஆரம்பத்திலிருந்து அலசுவோமா?
இயக்குனர் மாதேஷ், 'எம்ஜிஆர்' என்ற திரைப்பட டைட்டிலை பதிவு செய்து வைத்திருக்கிறார். விஜயகாந்த் நடித்த 'அரசாங்கம்' படத்தை இயக்கியவரும் இவர்தான். அந்த படத்திற்கே 'எம்ஜிஆர்' என்றுதான் பெயர் வைப்பதாக இருந்தார். ஆனால், அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையில் பலரும் இது குறித்து அலசுவார்கள். தேவையில்லாத எதிர்ப்பு கூட எழலாம் என்ற எண்ணத்தில், அந்த பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று கூறிவிட்டாராம் விஜயகாந்த். வருடங்கள் ஓடினாலும் கவனமாக இந்த டைட்டிலை புதுப்பித்துக் கொண்டேயிருந்தார் மாதேஷ்.
வில்லு, வேட்டைக்காரனை அடுத்து விஜய் நடிக்கப் போகும் படம் விசேஷமானது. இது இவரது ஐம்பதாவது படம். இந்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள், யார் தயாரிக்கப் போகிறார்கள், யார் ஜோடி என்பதெல்லாம் இன்னும் முடிவு செய்யாத விஜய், ஒன்றை மட்டும் முடிவு செய்திருந்தார். அது டைட்டில்! எம்ஜிஆர் என்ற மந்திர சக்தியையே தனது ஐம்பதாவது படத்திற்கு டைட்டிலாக வைக்க விரும்பினார். ஆனால் இந்த பெயரை மாதேஷ் பதிவு செய்திருப்பதை அறிந்ததும், முக்கியமான ஒருவர் மூலம் கேட்டனுப்பினாராம் விஜய். "எம்ஜிஆரை விட்டுக் கொடுப்பதை பற்றி ஆட்சேபணை இல்லை. ஆனால் என் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கணும்" என்றார் மாதேஷ். இப்படி ஒரு டிமாண்ட் வைப்பார் என்பதை எதிர்பார்க்காத விஜய் தரப்பு சைலண்டாக பின்வாங்கியது. ஆனாலும், எஸ்.ஏ.சி இயக்கிய 'பந்தயம்' படத்தில் பேரரசு இயக்குனராகவும், விஜய் ஹீரோவாகவும் வருவது மாதிரி ஒரு காட்சி அமைக்கப்பட்டது. படத்தில் வரும் அந்த படத்திற்கு 'எம்ஜிஆர்' என்று டைட்டில் வைத்து அழகு பார்த்தார் விஜயின் அப்பா எஸ்ஏசி.
இடையே நாட்கள் பரபரவென்று கழிந்தன. 'வில்லு' பட வேலைகளை முடித்துவிட்டு 'அக்கடா' என்று ஓய்வெடுக்கப் போன விஜயின் முன் மீண்டும் வந்து கண்ணாமூச்சு ஆடியது எம்ஜிஆர் படத் தலைப்பு. மாதேஷை அழைத்து நேரடியாகவே பேசினார்.
இதற்கிடையில், 'சிலம்பாட்டம்' படத்திற்கு பிறகு தான் நடிக்கப் போகும் 25 ஆவது படம் மிக பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தார் சிம்பு. காரணம் இந்த 25 வது படத்தின் போது இவருக்கு 25 வயது நிறைவடைகிறது. இடையில் போடா போடி, கெட்டவன் என்ற இரண்டு படங்களும் க்யூவில் நிற்க, அப்படியே அவற்றை ஓரம் கட்டிவிட்டு, தனக்கு மீண்டும் ஒரு சலசலப்பையும், பளபளப்பையும் ஏற்படுத்திக் கொடுத்த 'சிலம்பாட்டம்' இயக்குனர் சரவணன் இயக்கத்திலேயே ஒரு படத்தில் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாராம் சிம்பு. இருவரது மனசுக்குள்ளும் பளிச்சென்று மின்னிய டைட்டில் எம்ஜிஆர்.
இந்த டைட்டில் யாரிடம் இருக்கிறது என்று அலசிய சிம்பு, மாதேஷிடம் இருப்பதை அறிந்து அவரை நேரடியாகவே அணுகினாராம். இதனால் 'அலர்ட்' ஆனது விஜயின் ஏரியா. இந்த புதையல் வேட்டையில் இனியும் காலம் தாழ்த்தினால் சரிவராது என்ற முடிவெடுத்த விஜய், மாதேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார். விஜயின் ஐம்பத்தியோராவது படத்தை மாதேஷ்தான் இயக்குகிறாராம். ஏற்கனவே விஜய் நடிக்க 'மதுர' படத்தை இயக்கிய இனிப்பான அனுபவம் இருக்கிறது மாதேஷ§க்கு.
மாதேஷ்- விஜய் கூட்டு சேர்ந்ததையும், எம்ஜிஆர் டைட்டில் கைவிட்டு போனதையும் அறிந்த சிம்பு, விஜயின் மீது காட்டமாக இருக்கிறார் என்கிறார்கள் சிம்புவுக்கு நெருக்கமானவர்கள்.
தன்னம்பிக்கையில் அப்பாவுக்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல சிம்பு. எப்படியென்றால், தனக்கு நெருக்கமானவர் நடத்திய பார்ட்டி ஒன்றில் இப்படி பேசிக் கொண்டிருந்தாராம். "எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், அஜீத் விஜய்னு சொல்றாங்க. ஆனா நியாயமா அஜீத் சிம்புன்னுதான் சொல்லனும். வேணும்னா தனுஷ் விஜய்னு சொல்லிட்டு போகட்டுமே" என்றாராம். இதை நேரடியாக காதில் வாங்கியவர்கள் அப்போது அதிர்ச்சியை காண்பித்தாலும், சிம்புவின் தன்னம்பிக்கையை ரசித்தார்களாம்.
ஏற்கனவே தனது படங்களில் தன்னை அஜீத் ரசிகனாக காட்டி வரும் சிம்பு, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பஞ்ச் டயலாக் பேசி விஜயையும் சீண்டி வருவது வழக்கம். இவரது சிலம்பாட்டம் படத்தில் "வேணும்னா மலை கூட மோதிக்கோ, எங்க தல கூட மோதினா தாங்க மாட்டே" என்றெல்லாம் பஞ்ச் டயலாக் வைத்திருப்பார்கள். இந்த டைட்டில் மேட்டரும் எரிகிற தீயில் பெட்ரோல் வார்க்க, டைட்டில் சேசிங்கை ஒரு யுத்தம் போலவே ஆக்கிவிட்டார் சிம்பு என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
'வேட்டைக்காரன்' படத்தை முடித்துவிட்டுதான் 'எம்ஜிஆர்' படத்திற்கு வருவார் விஜய். அதற்குள் இதே சாயலில் ஒரு டைட்டிலை முடிவு செய்வேன் என்று சபதமிட்டவர் சொன்னபடி செய்தும் காட்டியிருக்கிறார். 'எம்.கோவிந்தராஜன்' என்பதுதான் அந்த தலைப்பாம். சிபிராஜ் நடித்த 'லீ என்கிற லீலாதரன்' மாதிரி, 'எம்ஜிஆர் என்கிற எம்.கோவிந்தராஜனாக' பதிவாகுமாம் இந்த தலைப்பு. விளம்பரங்களில் 'எம்ஜிஆர்' மட்டுமே பிரதானமாக தெரிவார் என்பதை சொல்லவும் வேண்டுமா?
விஷயத்தை கேள்விப்பட்ட விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், இந்த டைட்டில் குறித்து விஜய டி.ராஜேந்தரிடமே நேரடியாக பேசினாராம்.
சிறு வயதில் பிடிவாதம் காட்டிய இவர்களுக்கு சந்திரனை காட்டி சமாதானப்படுத்திய இந்த அப்பாக்கள், இப்போது செய்வதறியாமல் நிற்கிறார்கள். ஏனென்றால் இந்த பிள்ளைகள் கேட்பது வானத்து சந்திரனை அல்ல. அழகே உருவான பூலோகத்து (ராமச்)சந்திரனை!