Tuesday, July 14, 2009

முதல் முறையாக 'கேக்' வெட்டிய இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர்.

தனது வாழ்நாளிலேயே முதல் முறையாக கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளார் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர்.

கே.பாலச்சந்தரும், இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் இணைந்து முதல் முறையாக ஒரு படத்தில் நடிகர்களாக கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அது ரெட்டைச்சுழி.

மிகப் பெரிய நடிகர்களை ஆட்டிப்படைத்த அசாத்திய இயக்குநர்களான இவர்களே வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு நடிகர்களாக களம் இறங்கியிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் ரெட்டைச்சுழி படப்பிடிப்புத் தளத்தில் கே.பாலச்சந்தர் தனது பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.

கேக் வெட்டித்தான் பிறந்த நாள் கொண்டாடுவார்கள். அதில் அதிசயம் இல்லை. ஆனால் பாலச்சந்தர் அப்படிக் கொண்டாடியதுதான் அதிசயம். காரணம், இதுவரை அவர் தனது வாழ்நாளில் ஒருமுறை கூட கேக் வெட்டிக் கொண்டாடியதில்லையாம்.

9ம் தேதிதான் பாலச்சந்தர் பிறந்த நாள். படப்பிடிப்புக்காக நெல்லையில் முகாமிட்டிருந்த பாலச்சந்தர், பிறந்த நாளுக்காக சென்னைக்குப் போய் விட்டு நேற்று நெல்லை திரும்பினார்.

வந்தவரை கேக் சகிதமாக வரவேற்றனர் ரெட்டைச்சுழி படக்குழுவினர். பாரதிராஜா மற்றும் படக்குழுவினரின் அன்புக் கட்டளையைத் தட்ட முடியாமல் கேக் வெட்டினார். அவருக்கு பாரதிராஜா கேக் துண்டை எடுத்து வாயில் ஊட்டி விட்டார்.

பாரதிராஜா இதுகுறித்துக் கூறுகையில், நான் சினிமாவுக்கு வந்ததற்கு இருவர்தான் காரணம். ஒருவர் ஸ்ரீதர், இன்னொருவர் பாலச்சந்தர். அவர்களுடைய சாதனை அளவிட முடியாதது. அதைக் கொண்டாடும் வகையிலும்தான் கேக் வைத்துக் கொண்டாட வேண்டும என நான் கேட்டுக் கொண்டேன் என்றார்.

பாலச்சந்தர் கூறுகையில், பாரதியின் அன்பு எனக்குப் புதுத் தெம்பைக் கொடுததுள்ளது. இயக்குநர்களாக இருவரும் சிகரம் தொட்டிருக்கிறோம். நடிகர்களாகவும் நாங்கள் பதிவு செய்வோம் என்றார் போட்டிருந்த மீசை துடிதுடிக்க.

சரி, இந்த 'இளைஞருக்கு' எத்தனை வயது என்று சொல்லவில்லையே... 80 ஆகி விட்டதாம்!

0 comments:

Post a Comment

Followers