
பழைய படங்களை ரீமேக் செய்வது தவறு அல்ல... அப்படிப் பார்த்தால் கம்பராமாயணமே ஒரு ரீமேக்தான், என்றார் நடிகர் கமல்ஹாசன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- கலைஞானி கமல்ஹாசன் இணைந்து நடித்த காலத்தால் மறக்க முடியாத சூப்பர் ஹிட் படமான, 'நினைத்தாலே இனிக்கும்' படத்தின் பெயரை மீண்டும் ஒரு படத்துக்குச் சூட்டியுள்ளனர்.
இது, கேரளாவில் மிகப் பெரிய வெற்றிபெற்ற 'கிளாஸ்மேட்' என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
பிருதிவிராஜ், ஷக்தி (டைரக்டர் பி.வாசுவின் மகன்), கார்த்திக்குமார், பிரியாமணி ஆகியோர் இணைந்து நடித்து இருக்கிறார்கள். ஜி.என்.ஆர்.குமரவேலன் டைரக்டு செய்துள்ளார். கமல்ஹாசன் நடித்த பிளாக்பஸ்டர் படங்களான 'கல்யாணராமன்', 'கடல் மீன்கள்' ஆகிய படங்களை உருவாக்கிய இயக்குநர் ஜி.என்.ரங்கராஜனின் மகன்தான் குமரவேலன். ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. பாடல்களை நடிகர் கமலஹாசன் வெளியிட, 'நினைத்தாலே இனிக்கும்' படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் கமல்ஹாசன் பேசியதாவது:
விஜய் அன்டனி இசையமைத்த 'நாக்குமுக்க' பாடலை நான் தினமும் கேட்கிறேன் (இது கமலுக்காக ராஜா போட்ட 'அண்ணாத்தே ஆடறார்ட பாடலின் ரீமேக்தான்!). என் மகள் சுருதி ஹாசன் வைத்திருக்கும் செல்போனின் 'ரிங் டோன்' இதுதான். அதனால் அந்த பாடலை நான் தினமும் கேட்கிறேன். சுருதியின் குழந்தை கூட இந்த பாடலை கேட்டால், ஆச்சரியம் இல்லை.
நினைவுகள் இருக்கும்போது, இனிமையான எண்ணங்களும் இருக்கும். பழைய படங்களை மீண்டும் தயாரிப்பது (ரீமேக்) பற்றி இங்கே குறிப்பிட்டார்கள். அது தவறு அல்ல. கம்பராமாயணம் கூட ரீமேக்தான். இப்போது நான் எடுத்துக் கொண்டிருக்கும் படமும் ரீமேக்தான்.
ஹேராம், குணா... 'பொன் குஞ்சுகள்'!
'ஹேராம்' படம் பற்றி பிருதிவிராஜ் சொன்னார். அவருடைய ரசனை, இன்னும் சிலருக்கும் இருந்திருந்தால், படம் வெற்றிபெற்று இருக்கும். அதேபோல்தான் 'குணா'வும். தவறுக்கு, இந்திய சரித்திரம் தெரியாது. எனக்கு அந்த இரண்டு படங்களும் பொன் குஞ்சுகள்தான்.
தமிழ் நன்றாக பேச தெரிந்த நடிகைகளில் பிரியாமணியும் ஒருவர். அவர் மற்ற மொழிகளையும் கற்று பேச முயற்சிக்கிறார் என்று கேள்விப்பட்டேன். நல்ல விஷயம். எல்லா மொழிகளும் வணக்கத்துக்குரியவைதான்," என்றார் கமல்.
விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ், நடிகர்கள் பிருத்விராஜ், ஷக்தி, கார்த்திக்குமார், விஷ்ணு, நடிகை பிரியாமணி, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

0 comments:
Post a Comment